தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி தொடங்கி வைத்து, வெப்பக் காப்புப் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதற்கிடையே, நகரங்களையும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பேணிக் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பணியாற்றும் சூழலில் பசியற்று இருக்கவும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் காலை, மதியம் மற்றும் இரவு என சுழற்சி முறையில் பணியாற்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் 2025ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன் மூலம், தூய்மைப் பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் இன்று விரிவுப்படுத்தி தொடங்கி வைத்து, வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு தினந்தோறும் சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.213 கோடியே 92 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ்.எம்.நாசர், மா. மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


