நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
இத்தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வரும் மே 3ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை நீட் தேர்விற்கு மார்ச் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என என்டிஏ அறிவித்துள்ளது. இதன்படி, வரும் மே 3ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம்.
நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி – எஸ்டி பிரிவுக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
தேர்வுக்கான கட்டணத்தை மார்ச் 8ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நெப்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட வழிமுறைகளில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு விவரங்களை https://nta.ac.in/ மற்றும் https://neet.nta.nic.in/ வலைதளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


