தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பிப்.17ம் தேதி காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று தெரிவித்தார்.
மேலும், பிப்.20 ம் தேதி 2026-27ம் ஆண்டுக்கான முன் பண மானிய கோரிக்கை, 2025-26ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை அளிக்கப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆலோசித்த பின்னர், கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்தபடும் என்பது பற்றி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து கூறுகையில், சட்டப்பேரவை கூடிய நாள் முதல் என்ன பேசுகிறார்கள் என்பது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தீர்மானங்கள், மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்படுகிறது. கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.


