முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க, சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட் என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்தும் நிலை இருந்த வந்தது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்தது.
இதன் அடிப்படையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் ஒன் செயலியை கடந்தாண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயணிகள் பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் மூலம், முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட்டுகளை பெறலாம். பிஎன்ஆர் நிலை அறிதல், டிக்கெட் ரத்து, தொலைதூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி, பார்சல் அனுப்புவது குறித்த தகவல்கள், ரயில்வே நிர்வாகத்தின் உதவி எண்களை எளிதாக தொடர்பு கொள்தல் உள்ளிட்ட வசதிகளும் ரயில் ஒன் செயலியில் இடம்பெற்றுள்ளன.
இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை பயன்படுத்தி, இச்செயலியை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
வரும் 1ம் தேதி முதல் யுடிஎஸ் செயலி பயணிகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


