தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் முடிவடைகின்றன.
தமிழகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியானது. இதில் ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவர்களுக்காக ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, மறுபரிசீலனைக்காக தமிழகம் முழுவதும் முகாம்கள் மற்றும் இணையவழி மூலம் சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதேபோல, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றபோதும் உரிய ஆவணங்கள் அளிக்காத சுமார் 12 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இவர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று அதன் மீதான விசாரணையை முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உத்தரவிட்டது. அதன்படி, இதற்கான அவகாசம் தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது.
எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவுபெறும் பட்சத்தில், வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் சுமார் 5 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


