தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலை சந்திக்க இங்குள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இருப்பினும், காங்கிரஸ் – திமுக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படாமலேயே இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூடுதல் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததும், காங்கிரஸ் பிரமுகர்கள் வேறு கட்சிகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையும் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இன்னும் சில நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்த பின்னும், ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேலாக குழு அமைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்வான மாவட்டத் தலைவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஊடகங்களிடம் கவனமாக பேசவும், கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்பன உள்ளிட்டவை முக்கிய அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசிக்க உள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறுகையில், திமுக பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் வருத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வரும் 22ம் தேதி தொடங்க உள்ளதாகவும், தேர்தலுக்கான பணியில் திமுகவினர் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது


