மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றிய 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறுதல், வங்கி ஊழியர்களுக்கு வாரம் 5 நாட்கள் வேலை, அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை தவிர்த்தல் ஆகியவற்றை கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
இந்த போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
தமிழகத்தை பொருத்தவரை ஆளும் கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இன்று 600 மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது சேவை நிறுவன ஊழியர்கள் பங்கேற்பதால், அரசு அலுவலக வேலைகள் மற்றும் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்து சேவை, எல்ஐசி உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பொதுவேலை நிறுத்தத்தின் போது, அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதால், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகள் பாதிக்கப்படாது எனவும் கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.


