தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நடந்தது.
நிர்வாகிகள் கூட்டத்தையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் தவெகவைச் சேர்ந்த 4,998 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இதனையடுத்து நிர்வாகிகளை மட்டும் மைதானத்துக்குள் அனுமதிக்கும் வகையில், க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அங்கிருந்த போலீசார் அந்த அட்டைகளை ஸ்கேன் செய்து, நிர்வாகிகளை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
இதில் பங்கேற்பதற்காக, தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். சுமார் 11.30 மணியளவில் சேலம் விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு சென்றார்.
அதன் பிறகு, தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
இந்த கூட்டத்தில் 3 மணி நேரத்துக்கு மேலாக கடும் வெயிலில் காத்திருந்ததால் தொண்டர்கள், பார்வையாளர்களில் சிலர் மயக்கமடைந்தனர். அமருவதற்கு நாற்காலிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படாததால் வெயிலில் நின்றவர்கள் மயக்கம் அடைந்தனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற, வெள்ளி பட்டறையில் பணியாற்றிய வட மாநிலத் தொழிலாளி சூரஜ் (37) என்பவர் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த செப்.27ல் கரூரில் நடந்த விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


