தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழகம் வருகை தருவது டெல்லி மேலிட பாஜக தலைவர்களின் வழக்கமாகும். அதன்படியே, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரின் தமிழக வருகை அமைந்துள்ளது.
அவ்வாறே, பிரதமர் மோடி கடந்த மாதம் மதுராந்தகம் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த நிலையில், காரைக்காலில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை திருச்சி வரவுள்ளார்.
தேர்தல் நெருங்குவதால், கடந்த ஆண்டு முதல் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தரும் அமித் ஷா, பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக டெல்லியில் இருந்து பிஎஸ்எப் விமானத்தில் இன்று மாலை 6 மணி அளவில் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்தை இரவு 9 மணிக்கு வந்தடையும் அமித் ஷா, அங்கு கன்டோன்மென்ட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு தங்குகிறார்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் நாளை பகல் 12 மணி அளவில் காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின் அங்குள்ள ஓட்டலில் தங்கும் அமித் ஷா, கட்சிப் பிரமுகர்களை சந்திக்க இருக்கிறார்.
அதன் பிறகு, ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து மாலை விமானத்தில் டெல்லி புறப்பட உள்ளார்.


