நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் ஜன.28ம் தேதி தொடங்கி பிப்.13ம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். மேலும், இதன் 2வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9ம் தேதி நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய முதல் கட்ட கூட்டத்தொடரில், பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இதன் மீதான விவாதம் முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உரை இல்லாமலேயே கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்றது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் இடையூறுகள் காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின.
இந்நிலையில், முதல் கட்ட கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று அமெரிக்கா உடனான ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மக்களவை வரும் 9ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மேலும், இடையூறுகளால் சுமார் 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டதாகவும், மூன்று வார கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மார்ச் 9ம் தேதி அவை கூடும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


