கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும், மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.
கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு எனக் கூறிய அவர், திராவிட மாடல் அரசின் மிகப் பெரிய சாதனைகளினால், இந்தாண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகவும், இந்தியாவிலேயே உயர் கல்வியில் 46 சதவீதத்தை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
எல்லா மதங்களும் ஒன்றே. எந்த மத வழிபாட்டு முறைகளையும் கொச்சைப்படுத்த கூடாது. மத ஒற்றுமை, சமத்துவத்தை வலியுறுத்திய ஒரே இயக்கம் திமுகதான். திமுக ஆட்சியில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறினார்.
முதல்வரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தேசியளவில் தற்போது 10 மாநிலங்கள் பின்பற்றுவதாகவும், பள்ளிகளில் காலை உணவு திட்டம் தற்போது 11 மாநில அரசுகளால் மட்டுமின்றி இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலும் கூட செயல்படுத்தப்படுவதாகவும் திண்டுக்கல் லியோனி விளக்கினார்.
மேலும், துரோகிகளின் கூடாரமாக திகழும் தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக மிகவும் கேவலமான தோல்வியை சந்திக்கும் எனவும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை போன்று பில்டப் கொடுக்கும் விசில் கூட்டம் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் அவர் பேசினார்.


