திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கூடுதல் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னையில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இது காங்கிரஸிற்கும் நன்றாகத் தெரியும் எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி வலுவாக இருப்பதால் பிளவை ஏற்படுத்த சிலர் இது போன்ற கருத்துகள் மூலம் சதி திட்டம் தீட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.
இதனிடையே, மதுரையில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர், மதுரை வடக்குதான் நமது லட்சியம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் இதனை வலியுறுத்தி உள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டது வருத்தமளிப்பதாகவும், 41 தொகுதிகளில் போட்டியிட்டு வந்த காங்கிரஸ் தற்போது முதன்முறையாக 25 தொகுதிக்குள் இருப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஸ்டாலினை முதல்வராக்க பாடுபட்டோம். மீண்டும் அவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டுமென்றுதான் நினைக்கிறோம். கூட்டணி கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக இருந்தால் என்ன தவறு. நேர்மையானவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில் என்ன பிரச்னை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


