உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
10வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 25 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடிய இஷான் கிஷன் 40 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன், 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 27 ரன்களும், ரின்கு சிங் 11 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சகிப்சதா பர்கான் ரன் ஏதும் எடுக்காமலும், சைம் அயுப் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால், பாகிஸ்தான் அணி4.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து இணைந்த உஸ்மான் கான் 44, சதாப் கான் 14 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்தவர்களில் ஷாகின் அப்ரிடி 23 ரன்கள் எடுத்தார். 18 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம், இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.


