தவெக தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நடத்திய நிர்வாகிகள் சந்திப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷாவை விட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் எனப் பேசியது பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்துக்கு உள்ளானது.
நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சித் தலைவர் இப்படி பேசலாமா என திமுக எம்பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சுதா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தவெக தலைவர் விஜய், நடிகை திரிஷாவை இணைத்து அவதூறாக பேசிய பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் தவெகவினர் புகார் அளித்துள்ளனர். அதில், பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் பற்றி மிகவும் இழிவான மற்றும் தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தனது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், திரிஷா தொடர்பான கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனிப்பட்ட முறையில் யார் மனதும் புண்படும் வகையில் பேசமாட்டேன். மேலும், விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் உயிரிழப்பு ஏற்படுவது அவருக்கு நல்ல சகுனம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை. உயர்பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து இத்தகைய மோசமான கருத்தை எதிர்பார்க்கவில்லை என நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


