மார்ச் மாதம் தொடங்கவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தேர்வை 7,99,692 பள்ளி மாணவர்கள் மற்றும் 27,783 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 பேர் 3,412 மையங்களில் எழுத உள்ளதாகவும், மார்ச் 3 முதல் மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும் 11ம் வகுப்பு அரியர் தேர்வை 25,051 மாணவர்கள் 2,615 மையங்களில் எழுத இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 11 முதல் ஏப்.4ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் இந்த பொதுத்தேர்வை 8,82,806 பள்ளி மாணவர்கள் மற்றும் 26,196 தனித்தேர்வர்கள் உட்பட 9,09,002 மாணவர்கள் 4,219 மையங்களில் எழுத உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சிறைவாசிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 12ம் வகுப்புத் தேர்வை 281 பேரும், 10ம் வகுப்புத் தேர்வை 395 பேரும் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள தினசரி 49,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளைத் தவிர்க்கவும், தேர்வை முறையாகக் கண்காணிக்கவும் 4,900க்கும் அதிகமான பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் வெளியிட்ட தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு சாதாரண கால்குலேட்டர்கள் அனுமதிக்கப்படுவதோடு, வினாத்தாள் பாதுகாப்பிற்காகத் தேர்வு அறையிலேயே மீதமுள்ள தாள்களைச் சீல் வைக்கவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பெரிய எழுத்துக்களில் லாகரிதம் புத்தகங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தேர்வு மையங்களில், கடந்த காலத் தவறுகள் நிகழாத வண்ணம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகளிலேயே ஓஎம்ஆர் தாள்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்த பின்னரே தேர்வுத் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.


