விஜயின் சேலம் நிர்வாகிகள் சந்திப்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று பேசியிருந்தார்.
நயினாரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பெண்ணிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுக எம்பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் காங்கிரஸ் எம்பி சுதா உள்ளிட்டோரும் ஒரு பெண் குறித்து அவதூறாக பேசிய நயினாருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனும் அவரது இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், நயினாருடன் பேசும் போது இது பற்றி கேட்பதாகக் கூறியிருந்தார்.
இதனிடையே, நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மரியாதை குறைவான செயல்கள் எப்போதும் தட்டிக்கேட்கப்பட வேண்டியவை. மாநில அரசியலில் உயரிய பதவியில் இருக்கும் ஒரு நபர், இவ்வளவு கீழ்த்தரமான மற்றும் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, எதிர்காலத்தில் அப்படி இணையும் எண்ணமும் அவருக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடந்த காலங்களைப் போலவே அரசியலில் எப்போதும் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது நடிப்புத் திறமையால் அடையாளம் காணப்பட விரும்புகிறேன். அரசியல் அடையாளம் எனக்கு தேவையில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது என்பது பொதுவான நியதி. உயர் பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் எனது பெயரை இழுக்க வேண்டாம் என்றும் திரிஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எந்த ஒரு தனி மனித விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதுமில்லை; பேசியதுமில்லை. அன்றையதினம் வாய் தவறி வந்த வார்த்தை. அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இது குறித்து என்னிடம் பேசினார். யாரேனும் இந்த விவகாரத்தில் வருத்தப்படுகிறார்கள் என்றால், என் வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


