மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டமான சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வை 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில், 10ம் வகுப்பு தேர்வை 25 லட்சத்து 8319 பேர், 12ம் வகுப்பு தேர்வை 18 லட்சத்து 59,551 பேர் என நாடு முழுவதும் மொத்தம் 43 லட்சத்து 67 ஆயிரத்து 870 மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 8,074 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று (பிப்.17) 10ம் வகுப்புக்கு கணிதம், 12ம் வகுப்புக்கு உயிரிதொழில்நுட்பம் முனைவோர் பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
தேசிய கல்விக் கொள்கையின் படி, இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல் வாரியத் தேர்வை எழுதாமல், நேரடியாக 2வது வாரியத் தேர்வை எழுதலாமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், அனைத்து மாணவர்களும் முதல் வாரியத் தேர்வை எழுதுவது கட்டாயம் என சிபிஎஸ்இ தெளிவுப்படுத்தியுள்ளது.
முதல் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த 3 முக்கிய பாடங்களில் அதாவது, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதலாம் என்றும் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.
மேலும், முதல் தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதத் தவறிய மாணவர்கள் 2ம் வாரியத் தேர்வு எழுதத் தகுதி பெற மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


