தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இடையே இருமுனைப் போட்டி நிலவும் எனக் கூறப்பட்ட நிலையில், நடிகர் விஜயின் தவெகவின் அரசியல் வருகையால் மும்முனை போட்டியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து அழைப்பு வரும் எனவும் பாஜக மேலிடத்தின் மூலம் அங்கு சென்று சேர்ந்து விடலாம் என்ற கணக்கிலும் அவரது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாமல் திரிசங்கு சொர்க்கம் போல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
முதலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மூலம் அதிமுகவில் சேருவதற்கு எடுத்த முயற்சிகள் வீணானதால் கடும் விரக்தியில் இருக்கும் ஓபிஎஸ், ஒவ்வொரு காரணமாக கூறி, கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பிடி கொடுக்காமல் தள்ளிப் போட்டு கொண்டே சென்றவர், இறுதியில் தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறி தை மாதத்துக்கு பிறகு முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவரிடம் தை முடிந்து மாசி பிறந்து விட்டது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பொறுமையாக இருங்கள் என பதிலளித்து விட்டு சென்றார்.
மேலும், மகளிர் உரிமைத்தொகை முன்பணம், கோடைக்கால நிதியாக மகளிருக்கு ரூ. 5,000 கொடுக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மகளிருக்கு 5000 ரூபாய் கொடுத்ததை வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள் என்று கூறினார்.


