இலங்கை கடற்படையினரால் எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படும் அராஜக போக்கும் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்துள்ளது.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்திருக்கும் அடாத செயல், அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளை மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ம் தேதி விடுவிக்கப்பட்டும் அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் பரிதவித்து வருவதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்திருப்பது வேதனை அளிப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்தவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


