தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களின் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 11ம் தேதி சென்னை வந்த துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழு நேற்று கவுகாத்தி சென்றுள்ளது. இக்குழுவில் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சந்து, விவேக் ஜோஷியும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள், இன்றும், நாளையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீசார் ஆகியோரை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர்.
மேலும், தேர்தல் தயார் நிலை குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் மத்திய ஆயுதப்படை அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அங்கு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அசாமில் கடந்த 10ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அங்கு மொத்தம் 2,49,58,139 வாக்காளர்கள் உள்ளனர்.


