தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மைக்கேல்பட்டி பள்ளியில் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா கடந்த 2022ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவர் சித்தி கொடுமை, பள்ளியில் கொடுக்கப்பட்ட கூடுதல் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் மாணவி லாவண்யாவை கட்டாய மதமாற்றத்தில் ஈடுப்படுத்தியதால், இந்த மரணம் நிகழ்ந்ததாக அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விஎச்பி நிர்வாகிகள் குற்றம்சாட்டினார்கள். இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது.
இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ தற்போது நிலை அறிக்கையை சமர்பித்துள்ளது.
அதில், மைக்கேல் பட்டி பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் படித்து முடித்து வெளியேறிய மாணவர்கள் பலரது சான்றிதழ்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறும் போது மதம் மாறவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், விரிவாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்ட லாவண்யா உட்பட வேறு எவரையும் அத்தகைய மதமாற்றத்திற்கு உட்படுத்தவும் இல்லை, அதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


