தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோவன், செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியோடு நிறைவுபெறுகிறது.
இதனையொட்டி, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப். 26ம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 5ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட காலியாக உள்ள 10 மாநிலங்களைவை எம்.பி தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மநீமக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுக்க திமுக முன்வந்துள்ளது.
அதே போல், இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக கூடுதல் சட்டப்பேரவைத் தொகுதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டு வருவதால் கூட்டணி முடிவாகாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.
ஆனால், திமுகவோ வரும் 22ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை, கூட்டணி தொகுதி பங்கீட்டை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி மீண்டும் தமிழகம் வருவதற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. அதே வேளை, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தால் தொகுதி பங்கீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


