கிறித்தவர்களின் முக்கியமான புனித நாட்களில் ஒன்றான திருநீற்றுப் புதன் அல்லது சாம்பல் புதன் முன்பு விபூதிப் புதன் என்று அழைக்கப்பட்டது. இந்நாளில் கிறித்தவர்கள் நெற்றியில் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலால் சிலுவை அடையாளமிடப்படுகிறது.
ஏனென்றால், சாம்பல் தவத்திற்கும், தன்னொறுத்தலுக்கும், மன மாற்றத்திற்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. சாம்பல் புதன் மனித இறப்பு மற்றும் கடவுளின் அருளைப் பெற வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. மேலும் இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நாற்பது நாள் நீடிக்கின்ற தவக்காலத்தின் முதல் நாள் இதுவே ஆகும்.
திருநீற்றுப் புதனிலிருந்து 46ம் நாளாக கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால், ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்த்தெழுந்த மகிழ்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன், ஆங்கிலிக்கன், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வு இன்று உலகம் முழுவதும் தொடங்கியது. சாம்பல் புதன் முதல் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களிலும் இன்று சாம்பல் புதன் நிகழ்வு திருப்பலி, ஆராதனைகளுடன் தொடங்கியது.
சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர், புனித தோமையார் மலை, பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை 6 மணி முதல் திருப்பலி, ஆராதனை அதன் பிறகு சிலுவைப்பாதையுடன் நடந்தேறியது. இந்த தவக்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அசைவ உணவை தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


