ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமிய நாள்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்த நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.
இந்தாண்டு ரம்ஜான் மாத நோன்பு பிப்.18 முதல் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இதனை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே, 2026ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கும்படி இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதால் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.20 கோடியே 88 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.


