தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் துணைத் தேர்தல் ஆணையர்கள் தலைமையிலானக் குழு தேர்தல் தயாரிப்பு, தேர்தல் முன்னேற்பாடு குறித்து இம்மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும், சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, கடந்த 11ம் தேதி சென்னை வந்த துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையிலான உயரதிகாரிகள் குழு 3 நாட்கள் முகாமிட்டு ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க பிப். 26, 27 தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள், ரயில்வே, தபால் துறை, போதைப்பொருள் தடுப்பு , சிபிஆர்எப், வருமான வரித் துறை, அமலாக்கத்துறை என தேர்தல் தொடர்பான 20 ஒருங்கிணைப்புதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த குழுவானது 27ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பல்வேறு நிலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்து ஆலோசனை குறித்து விரிவான விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


