பொதுவாகவே, தக்காளி மற்றும் வெங்காயம் விலை மழைக் காலங்களில் ஏற்படும் சேதத்தினால் தறுமாறாக ஏற்றம் காண்பது வழக்கமாகும். அதே போல், கோடைக்காலத்தில் இவற்றின் விலை வீழ்வதும் வாடிக்கையான ஒன்று.
விலையேற்றதின் போது அதனை ஈடுசெய்ய மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம், தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
வழக்கமாக, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், கடவூர், புத்தூர், வடமதுரை, தென்னம்பட்டி, மலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வரை 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.750 ரூபாய் முதல் ரூ.1,200 வரை விற்கப்பட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விலையேற்றம் கண்டது.
இதனை நம்பி சமீபத்தில் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஏராளமான அளவில் தக்காளி சாகுபடி செய்தனர்.
தற்போது விளைச்சல் அதிகரிப்பாலும், வெளிமாநிலங்களின் தக்காளி வரத்தாலும் அதன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அய்யலூர் சந்தையில் வழக்கத்துக்கு மாறாக 100 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக, 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து கிலோ ஒன்று ரூ.10க்கு விற்கப்படுகிறது.


