தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 2வது வாரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இம்மாநிலங்களில் அரசியல் களவரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணி வரும் 22ம் தேதி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கும் என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதே நேரம், தேமுதிகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தாலும், அங்குள்ள உள்கட்சி பூசலால் நமச்சிவாயம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகினர்.
புதுச்சேரியில் கடந்த முறை அமைந்த என்டிஏ கூட்டணி மீண்டும் தொடரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அக்கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சியை சேர்த்தால், தவெகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முதல்வர் ரங்கசாமி தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், காரைக்கால் சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா என்ஆர் காங்கிரஸ் உடனான என்டிஏ கூட்டணியை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அக்கூட்டணி தயாராகி வருகிறது.
அதன்படி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ள என்ஆர் காங்கிரஸ், சில தொகுதிகளை மாற்ற முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே வேளை, புதுச்சேரியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான ஜேசிஎம் மக்கள் மன்றம், ஆளும் என்ஆர் காங்கிரஸ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இந்நிலையில், ஜோஸ் கடந்தாண்டு டிச.15ம் தேதி லட்சிய ஜனநாயக கட்சியைத் தொடங்கினார்.
தற்போது, இந்த லட்சிய ஜனநாயக கட்சியை என்டிஏ கூட்டணிக்கு கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது. தங்களது ஆட்சியை பற்றி குறை கூறிய இக்கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


