தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக தேமுதிக, திமுக தலைமையிலானக் கூட்டணியில் இன்று இணைந்துள்ளது.
இதற்காக சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், செய்தியாளர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பப்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். 2016க்கு பிறகு தாமதமாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை இரு கட்சிகளின் குழுவினர் பேசி முடிவெடுப்பார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.
அதிமுகவிடம் கூட்டணி பேசியதாக கூறியதற்கு மறுப்பு தெரிவித்த அவர், ஊடகங்கள்தான் தங்களது டிஆர்பி ரேட்டிற்காக அவ்வாறு தவறாக ஒளிபரப்பியதாக விளக்கமளித்தார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதனை அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர், அண்ணா அறிவாலயத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு சென்ற பிரேமலதா அங்கு அமைந்துள்ள அக்கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு, அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் கலைஞர் மீது கேப்டன் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக-தேமுதிக கூட்டணி அமையுமா என்பது பற்றி பேசிய முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழும் வாய்ப்பு வராமலாப் போகும் என்று கூறியிருந்தார். தற்போது, பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அது நடந்துள்ளது.
திமுகவுடன் முதல் முறையாக கூட்டணியை வைத்துள்ளோம். இதனால் இந்த கூட்டணி மிகவும் வலிமையடைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்று வந்திருந்தவர்களுக்கு உணவு பறிமாறினார். இதன் போது, கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்கே. சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும், இது தொடர்பாக பிரேமலதா அவரது எக்ஸ் தளத்தில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். #DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.


