இஸ்லாமிய நாள்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதத்தில் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்தாண்டுக்கான நோன்பு பிப்.19 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனையொட்டி, இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று வழக்கம் போன்று, மசூதிகளில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு அரசு 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று (பிப்.18) மாலை ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.19) முதல் புனித ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்குவதாக அரசின் தலைமை காஜி முப்தி உஸ்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், புனிதமான இந்த மாதத்தில் அனைவரும் நோன்பு இருந்து, இறை அருளைப் பெற இஸ்லாமியப் பெருமக்களை வாழ்த்துவதாகவும் தலைமை காஜி தெரிவித்திருந்தார்.
ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கபட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்றிரவு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
சென்னையில் ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி வாலஜா, அண்ணாசாலை மக்கா, மமூர், நந்தனம் பஹ்ரம் ஜங் உள்ளிட்ட மசூதிகளிலும், நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா, மதுரையில் கோரிப்பாளையம், மேலமாசி வீதி, காஜிமார் தெரு, மகபூப்பாளையம், கரீம்ஷா, நெல்பேட்டை, அண்ணாநகர் உள்பட தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


