தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பிப். 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பிப். 23, 24ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வட தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


