திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இன்று (பிப்.20) முதல் மார்ச் 2ம் தேதி வரை விருப்பமனு விநியோகிக்கப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் இன்று (பிப். 20) தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் தலைமைக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் திருப்பி தரப்படும். மேலும், விண்ணப்பப் படிவத்தை ரூ.1,000 செலுத்தி சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை பிப். 22ம் தேதி முதல் திமுக தொடங்கவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையில் பிப்.17ல் நடைபெற்ற மண்டலப் பொறுப்பாளர்கள், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை பிப். 23ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் டிஆர். பாலு தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


