எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் செய்துள்ள மாற்றங்கள் இன்று (பிப்.20) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10, 11வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரயில்கள், 2026 பிப்.20 நள்ளிரவு 00:00 மணி முதல் ஏப். 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படவுள்ளன.
இந்த காலகட்டத்தில், அனைத்து மின்சார (இஎம்யூ) ரயில்களும் சென்னை எழும்பூரில் விரைவுப் பாதையான 6வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.
அதே போன்று, மறுமார்க்கத்தில் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் சென்னை கடற்கரையில் இருந்து வரும் அனைத்து மின்சார ரயில்களும் எழும்பூரில் விரைவு பாதையான 5வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் காலகட்டத்தில் (பிப்.20 முதல் ஏப்.5 வரை), சென்னை கடற்கரை தாம்பரம்/செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு ஏ-வில் (அனெக்சர்-ஏ) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தனி நேர அட்டவணை கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.


