தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் பெரும்பாலும் முடிவு எட்டப்பட்டு விட்டது.
ஆனால், தேமுதிக, பாமக ராமதாஸ், தவெக, ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், நேற்று சென்னை அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதிபடுத்தினார்.
தற்போது மேலக் குறிப்பிட்ட இதரக்கட்சிகளின் நிலைப்பாடு தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24ம் தேதி அவரது தோழி சசிகலா கட்சி தொடங்க இருப்பதாகவும் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிகவின் திமுக கூட்டணி வருகையை, கூடுதல் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த காங்கிரஸ் கட்சிக்கு வைக்கப்பட்ட ‘செக்’காகவே அரசியல் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கூடுதலாக ஒரு கட்சி (தேமுதிக) இணைந்திருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி முறியுமா என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்பி. மாணிக்கம் தாகூர், இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. தேமுதிக வருகையால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்பது பொய்யான கருத்து என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில், திமுக – காங்கிரஸ் உறவு என்பது நீண்ட கால உறவு. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குழு அமைத்துள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கூறினார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என்பது பற்றிய கருத்துக்கு பதிலளித்த அவர், கட்சியின் நிலைகளை தவறிப் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மணிசங்கர் குறித்து பேச தேவையில்லை. அவரது பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலின் வலுவான தலைவராக உள்ளதாக சீமான் கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், இந்தியா கூட்டணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை மிக முக்கியமான அங்கம் வகிப்பவர். எதிர்க்கட்சித் தலைவர்களிலேயே முக்கியமான தலைவராக அவர் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.


