தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், 10 பேர் கொண்ட 6 தேர்தல் குழுக்களை அமைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் நபர்கள் அந்தந்த தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதையும் அவர்கள் கட்சியின் வேறு எந்த குழுவிலும் இடம் பெறக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் கரூர், சேலம் மாவட்டங்களில் பொதுக் கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை நடத்திய விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் குறைந்தபட்சமாக தொகுதிக்கு 2 ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தன்னார்வலர்களாக நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் தொகுதிக்கு குறைந்தபட்சம் 2 ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்களை தன்னார்வலர்களாக நியமிக்க வேண்டும். இதற்கான வேலைகளில் மாவட்ட நிர்வாகிகள் உடனே ஈடுபட வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.


