முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைதாகி இரண்டு முறை சிறை சென்ற போதும், அவரால் தமிழக முதல்வராக நியமிக்கப்பட்ட நம்பிக்கைக்குரியவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம்.
ஜெ.வின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்த அவர், ஜெ.வின் மறைவுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டார். அதிலும் குறிப்பாக ஜெ.வின் உற்ற தோழியான சசிகலா, ஓபிஎஸ்ஸை நம்பாமல் எடப்பாடியைச் சேர்ந்த பழனிசாமியை அவர் சிறை செல்லும் முன், முதல்வராக்கி அழகு பார்த்தார்.
ஆனால் இபிஎஸ்ஸோ நம்பிக்கை துரோகம் செய்ததுடன், சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தையும் ஓரம் கட்டி, இன்று எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவர் உருவாக்கி வளர்த்த அதிமுகவை தன் வசமாக்கி கொண்டார்.
அதிமுகவில் இருந்து 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அடியோடு ஓரம் கட்டப்பட்டதால், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அமைப்பை தொடங்கியும் அவரால் இதுவரை அதிமுகவை மீட்க முடியவில்லை.
இதையறிந்த, அவரது ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவிலும் ஜேசிடி பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் தவெகவிலும் இணைந்துவிட்டனர்.
ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகி மாற்று கட்சியில் இணைந்ததால், தனித்து விடப்பட்ட ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியானது.
ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கும் போது, ஏதேதோ காரணங்கள் கூறி அவரது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்தார். பின்னர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல், தை மாதம் முடிவை தெரிவிப்பதாக அறிவித்தார்.
ஆனால் தை முடிந்து மாசி மாதம் தொடங்கிய நிலையிலும், ‘பொறுமையாக இருங்கள்’ எனக் கூறி எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்க முடியாமல் திரிசங்கு சொர்க்கம் போல் தவித்து வருகிறார். முன்னதாக, அவர் டிடிவி தினகரனைக் கொண்டு அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைய எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், இன்று யாரும் எதிர்பாராத வகையில், சட்டப்பேரவை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அங்கு சென்றிருந்த ஓபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அறைக்கு சென்று பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசினார். இதன்போது, அரசியல் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் திமுகவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


