பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சியின் தலைமைப் பொறுப்பு, கட்சியின் முக்கிய முடிவுகளில் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அதிகார மையத்திற்கான மோதலினால் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிரிந்து ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என்று செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலைக் கருத்தில் கொண்டு, இருதரப்பும் போட்டி நியமனங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் மூலம் தங்களுக்கே கட்சியின் அதிகாரம் உள்ளதாக கூறி வருகின்றது.
பாமகவின் தேர்தல் சின்னமான மாம்பழத்தை, அன்புமணி தரப்புக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்தாண்டு ஜூலை மாதம் கடிதம் அனுப்பியது. அதனை ரத்து செய்ய உத்தரவிட கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் கடந்த 2025 மே மாதம் முடிவடைந்துவிட்டது. ஆனால், இன்னும் தலைவராக நீடிப்பதாக தேர்தல் ஆணையத்தில் அன்புமணி ராமதாஸ் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும்,அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், கட்சியின் தலைவர் என்ற முறையில் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான கடிதம் தனது முகவரிக்குத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, ஒரே நேரத்தில் இரண்டு வழக்குகள் தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக அபராதம் விதிக்கக் கூடும் என்றும் எச்சரித்தார். பின்னர், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று தெரிவித்தார்.


