எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு உள்ளிட்டப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதனால், ரயில் சேவையில் மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அந்த மாற்றங்கள் பிப்.20 நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10, 11வது நடைமேடையில் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் முழுவதுமாக பிப். 20 முதல் 5, 6வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே கூறியிருந்தது.
இந்நிலையில், ஏப்.5ம் தேதி வரை, 8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் சிரமத்தை தவிர்க்கவும் அவர்களது வசதிக்காகவும் எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில், எழும்பூர்-குமரி செல்லும் விரைவு ரயில் மற்றும் எழும்பூர் – புதுவை, செங்கோட்டை, நெல்லை, மதுரை, மன்னார்குடி, சேலம் செல்லும் விரைவு ரயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும் என்று தெரிவித்துள்ளது.


