தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அம்மாநிலங்களில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதனிடையே, தேமுதிகவும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இணைந்துள்ளது.
இதற்கிடையே, தொகுதி பங்கீடு குறித்து திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பிப். 23 முதல் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அதே போன்று, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐயூஎம்எல்.லில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமையிலான இக்குழுவில் எம்பி நவாஸ் கனி, முன்னாள் எம்பி அப்துல் ரகுமான், அபூபக்கர் மற்றும் ஷாஜகான் இடம் பெற்றுள்ளனர்.
கூட்டணியில் கால் நூற்றாண்டாக பயணித்து வரும் ஐயூஎம்எல் உடன்தான் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்குவது வழக்கம். கருணாநிதி காலம் தொட்டு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை இது பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் (பிப்.23) தொடங்கவிருக்கும் கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தைக்கு, முதல் கட்சியாக ஐயூஎம்எல்.க்கு அழைப்பு விடுத்துள்ள திமுக, அக்கட்சியுடனான தொகுதி பங்கீடு உடன்படிக்கையை கையெழுத்திட முடிவு செய்துள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வாணியம்பாடி, கடையநல்லூர் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தற்போது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகள் கோரிக்கை விடுக்க ஐயூஎம்எல் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், திமுக தலைமையின் முடிவு என்னவாக இருக்கும், எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


