தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக களம் இறங்கியுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக-அதிமுக-தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதேவேளை, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உடனான நிலைப்பாட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், திமுக தரப்பில் தொகுதி பங்கீடு, பேச்சுவார்த்தை குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால், தங்களது தரப்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு திமுக உடனான பேச்சுவார்த்தைக்கு காத்திருப்பதாகவும் இதனால் தொண்டர்கள் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து, தொகுதி பங்கீடு குறித்து திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில், டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பிப். 23 முதல் பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து, திமுக மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மமக குழுவுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்டுள்ளோம். அதிக தொகுதிகளை கேட்டிருப்பதால், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான். பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த முறையும் மமக, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என்று கூறினார்.
கடந்த 2021 தேர்தலில் மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மமக போட்டியிட்டது.


