தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நெறியாளர்களின் கேள்விக்கு அரசியல் தலைவர்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் துறை சார்ந்த வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடையில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், 2026ம் ஆண்டு தேர்தல் பாஜகவிற்கு முக்கியமான தேர்தல், நல்ல எண்ணிக்கையில் இந்த முறை வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும், தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்கவில்லை. அவர் இன்னும் அதிகளவு களத்தில் நிற்க வேண்டும். தேர்தல் காலம் மிக முக்கியமானது. அதனை தவெகவினர் எப்படி கையாள உள்ளனர் என்பது முக்கியம் என்று பதிலளித்தார்.
தொடர்ந்து கூறுகையில், விஜய் அரசியல் வரும் போது களம் வேறாக உள்ளது. கரூரில் சூழ்நிலையை விஜய் இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்க வேண்டும். ஆனால் நான் விஜய் பக்கம் இருக்கிறேன். தமிழக அரசியல் குறித்து விஜய் இந்த தேர்தலுக்கு பிறகு நன்றாக புரிந்து கொள்வார். அரசியலுக்கு வந்த பிறகும் ஒரு சில விஷயங்களில் விஜய் அமைதியாகவே இருந்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.


