தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் பிப்.10ம் தேதியுடன் முடிவடைந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியானது. இதில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்காக பிப்.10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, மறுபரிசீலனைக்காக தமிழகம் முழுவதும் முகாம்கள் மற்றும் இணையவழி மூலம் சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதேபோல, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றபோதும் உரிய ஆவணங்கள் அளிக்காத சுமார் 12 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19 வெளியிடப்பட்டது. அதன்படி, பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
முன்னதாக, பிப்.17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவகாசம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான ஆட்சியர்கள் உன்று காலை இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்டங்களில் வெளியிட்டனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இறுதி வாக்காளர் விவரங்களை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7 ஆயிரத்து 617 பேரும் இருப்பதாக இறுதி வாக்காளர் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். கடந்தாண்டு அக். 27ம் தேதி நிலவரப்படி 6 கோடியே 41 லட்சத்து வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு 5 கோடியே 43 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இப்போது கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.


