நாட்டின் முதல் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்ட அதிவேக ரயில் சேவை திட்டத்தில் சில வழித்தடங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இதன் ஒருபகுதியாக, டெல்லி மற்றும் உ.பி.யின் மீரட் நகரை இணைக்கும் 82 கி.மீ. தொலைவிற்கான திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நிலையத்தில் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்து மீரட் தெற்கு நிலையம் வரை ரயிலில் பயணம் செய்தார்.
நமோ பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக்கூடியவை. மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயங்கும் மீரட் மெட்ரோ இந்தியாவின் அதிவேக மெட்ரோ அமைப்பாகும். இனிமேல், டெல்லியின் சராய் காலே கான் முதல் மீரட் மோடிபுரம் வரையிலான 82 கிமீ தூரத்தை 55 முதல் 60 நிமிடங்களில் கடக்க முடியும்.
இந்த ரயிலில் பயணச்சீட்டு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ. 210 வரை தூரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய அவசர நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒன்றும், சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், 70 கிமீ தூரம் மேல்மட்ட பாலத்திலும், 12 கிமீ சுரங்கப் பாதையிலும் பயணிக்கும். 3 பெட்டிகள் கொண்ட இதில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 700 பேர் வரை பயணிக்க முடியும். ஏசி, மிருதுவான இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
மீரட் மெட்ரோ நிறுவனம், அதன் தண்டவாளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்து கொள்வதால், மெட்ரோவில் பயணிப்பவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமல், அங்கேயே நமோ பாரத் ரயிலில் ஏறிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


