ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்கள், 4 மீனவர்கள் என மொத்தம் 22 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இலங்கை கடற்படையினரின் தொடரும் இந்த அட்டூழியம், அத்துமீறல், மீனவர்கள், அவர்களின் குடும்பங்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 259 மீன் பிடிபடகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகவும் நேற்று (பிப்.22) பிடித்துச் செல்லப்பட்டவர்கள் உள்பட இதுவரை 116 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


