தமிழ்நாட்டிற்கு நேற்று வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சுமார் 45 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியும் உடன் இருந்தார்.
இதில், தொகுதி பங்கீடு குறித்தும், காங்கிரஸின் விருப்பத் தொகுதி பட்டியலும் வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், தமிழக காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று மீண்டும் திமுக எம்.பி. கனிமொழியை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், தொகுதி பங்கீடு, மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. இரு தரப்பிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுக்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிவித்தார்.
மேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், எல்லாவற்றை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஆனால், தொகுதி பங்கீடு என்பது முக்கியமான விஷயம். ஆகவே, அது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று பதிலளித்தார்.


