அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த மூத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் உடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதன் போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு உடனிருந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அதன் பின்பு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் சர்வாதிகாரமாக ஆணவப் போக்கோடு நடந்து கொண்டு அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிட்டார். எந்தக் காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது என்னும் சூழ்நிலையை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தளபதியின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் இணைந்தது சுயமாக சிந்தித்து கடந்த கால நிகழ்வுகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பதற்காக எடுத்தவை. திமுகவில் இணைய யாரும் அழுத்தம் தரவில்லை. ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு மு.க.ஸ்டாலின் திமுகவை வழிநடத்தி செல்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும், அனைத்து நிலைகளிலும் சிறப்பானதொரு ஆட்சியை தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார் என்பதை நாடு உன்னிப்பாக கவனித்துக்கொண்டுள்ளது.
திராவிட இயக்கத்தை காக்க, திராவிட கொள்கையை காக்க திமுகவே தலைசிறந்த இயக்கமாகும். திமுகவில் தொண்டனாக இணைந்துள்ளேன். தொண்டன் எவ்வாறு இயக்கத்திற்காக பாடுபடுவானோ அதேபோல் பாடுபடுவேன். சட்டப்பேரவைத் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் வாய்ப்பு தந்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூறினார்.
முன்னதாக, அதிமுகவில் வெடித்த ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தால் அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார். பின்னர், அதிமுகவில் இணைய பல தரப்பின் மூலமாக தூது அனுப்பிக் கொண்டே இருந்தார்.
அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த ஓபிஎஸ், திமுக தரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தீவிரமானது. அதனைத் தொடர்ந்து, முதலில் தனது ஆதரவாளர்களை அனுப்பிய ஓபிஎஸ் தற்போது மகனுடன் சேர்ந்து திமுகவில் இணைந்துள்ளார்.
தேமுதிக இணைந்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது அக்கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது. அதே நேரம், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.


