தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, ஏப்.1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகம் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகளின் எரிபொருள் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப். 1 முதல் அனைத்து எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் (ஓஎம்சிக்கள்) ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும்.
இதன்படி, பெட்ரோலில் குறைந்தபட்ச ரிசர்ச் ஆக்டேன் எண் (ஆர்ஓஎன்) 95 ஆக இருக்க வேண்டும் என்ற கடுமையான விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிபொருளின் தரத்தை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கரும்பு, சோளம் மற்றும் பிற தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், விவசாயப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோலுடன் ஒப்பிடுகையில், எத்தனால் மிகவும் சுத்தமாக எரிவதால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதுடன், 2014-15 முதல் எத்தனால் கலப்பதால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆர்ஓஎன்95 அதிக அழுத்தத்தை எரிபொருள் தாங்கும் திறன் கொண்டது என்பதைக் குறிப்பதாகும். பெட்ரோல் இயந்திரத்திற்குள் எரிபொருள் முறையற்ற முறையில் எரியும் போது ஏற்படும் நாக்கிங் சிக்கலைத் தடுக்க அதிக ஆக்டேன் எரிபொருள் அவசியம். எத்தனால் இயற்கையாகவே அதிக ஆக்டேன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஓஎன்95 பெட்ரோல் வாகன இயந்திரத்தின் செயல்திறனை அதிகரிப்பது மட்டுமின்றி இயந்திரத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
வாகன ஓட்டிகள் தற்போது இ20 எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். 2023ம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் இ20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பழைய வாகனங்களில் மைலேஜ் அல்லது எரிபொருள் திறன் 3 முதல் 7 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும், பழைய எஞ்சின்களில் உள்ள ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் சற்று வேகமாக தேய்ந்து போகக்கூடும். இருப்பினும், இந்த மாற்றம் ஒட்டுமொத்த எரிபொருள் அமைப்பில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, தற்போது பயன்படுத்தப்படும் வாகனம் இ20 எரிபொருளுடன் இணக்கமாக செயல்படுமா என்பதை மட்டுமே சரிபார்த்து கொண்டால் போதுமானது.


