உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலிஜியம் குழு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூடிய போது, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, கொலிஜியத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய சட்டத்துறை மற்றும் குடியசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் மணிந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனவே மார்ச் 6ம் தேதி முதல் தர்மாதிகாரி பொறுப்பேற்பார் என்று தெரியவந்துள்ளது.
அதே போன்று, அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி லிசா கில், ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக முகமது நதீம் செராஜ் உட்பட ஒன்பது வழக்கறிஞர்களை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


