சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் கீழ் பூவிருந்தவல்லி – வடபழனி இடையிலான 15.8 கி.மீ தூர உயர்மட்டப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. இந்த வழித்தடத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த பணிகளின் இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வுகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சிஎம்ஆர்எஸ்) அனுமதி அளித்துள்ளார். இதனால், மார்ச் 2026க்குள் இந்தச் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சிஎம்ஆர்எஸ் ஆய்வுகள், வேக சோதனை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை (ஓசிசி) சோதனைகள் முடிந்து, 10 ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் போரூர் மற்றும் பூவிருந்தவல்லி இடையே 7 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரை சுமார் அரை மணி நேரத்தில் பயணிக்க முடியும்.
இந்த வழித்தடம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளான போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு மெட்ரோ பாலம் மற்றும் 10 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையின் மூலம் பூவிருந்தவல்லி மற்றும் சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான பயண நேரம் வெகுவாகக் குறையும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தலைமையிலான குழு 4 நாட்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பூவிருந்தவல்லி – வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.


