ஈரான் ஏவுகணை பலத்தை அதிகளவில் பெருக்கி வருவதாகவும், அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கை ஈரான் சிதைத்து வருவதாலும், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் ஆயுதங்கள், நிதி உதவி, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்ததாலும் கொமேனியின் அதிகாரத்தை முடக்க அமெரிக்கா-இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டன.
கடந்தாண்டு ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவும் அதன் போர் விமானங்களை அனுப்பி ஈரானின் அணு உலைகள் மீது அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. 12 நாட்கள் நடந்த இப்போரில் ஈரானில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்பட 680 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ராணுவ தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானை அதிபர் டிரம்ப் கட்டாயப்படுத்தினார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் பலமுறை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதே நேரம், ஈரானை அச்சுறுத்த அமெரிக்க போர் கப்பல்களை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார். வளைகுடா பிராந்தியத்தில் பல்வேறு ராணுவ நிலைகளில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டன. ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயாராக இருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவரான கொமேனியின் வீடு, அதிபர் மாளிகை தரைமட்டமாக்கப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர். முதலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் அரசு பின்னர் இதனை உறுதிப்படுத்தியது.
மேலும், கோமெனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொமேனியின் மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா உடனடியாக போரை நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளது. போரை கைவிட்டு ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க உலக நாடுகளும் வலியுறுத்தி உள்ளன.
இதனிடையே, ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதலை தொடங்கி வைத்து விட்டீர்கள்; இனி முடிவு உங்கள் கையில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் சுமார் 43 லட்சம் இந்தியர்களும், சவுதியில் 27 லட்சம், குவைத்தில் 10 லட்சம், ஓமனில் 7.8 லட்சம், கத்தாரில் 8.7 லட்சம், பக்ரைனில் 3.5 லட்சம் பேர் என வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர்.
ஈரானில் உள்ள இந்தியர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்க இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. மேலும், +989128109115 +989128109109 +989128109102 +989932179359 ஆகிய உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
நேற்று 410 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் விமான சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையம் முழுமையாக இயங்காது என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஈரானின் அரசியலமைப்பின்படி, உச்ச தலைவர் என்பவர் ஆன்மீகத் தலைவர் மட்டுமல்ல; ராணுவம், வெளியுறவுக் கொள்கை, நீதித்துறை, ஊடகங்கள் என அனைத்திலும் இவருடைய முடிவே இறுதியானது. குறிப்பாக, ஈரானின் மிகவும் பலம் வாய்ந்த ‘புரட்சிகர காவல் படை’ (ஐஆர்ஜிசி) நேரடியாக இவரது கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
கடந்த 1989ம் ஆண்டு உச்ச தலைவர் ருஹோல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பிற்கு அயதுல்லா அலி கொமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


