தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு மார்ச் 2ம் முதல் 26ம் தேதி வரையிலும், 10ம் வகுப்புக்கு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6 வரையிலும் நடைபெறுகின்றன.
இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் அடிப்படையில் 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் முந்தைய ஆண்டுகளில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வு மார்ச் 3 முதல் 27ம் தேதி வரையில், 2,615 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள் 19,107 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் எழுதவுள்ளனர். மேல்நிலைப் பொதுத்தேர்வை 281 சிறைவாசிகளும் எழுதவுள்ளனர்.
பொதுத் தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாகவும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வுகளுக்காக 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 5 விடைத்தாள் சேகரிக்கும் மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


